வெள்ளி, ஜனவரி 18, 2013

நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்





கண்மணி குணசேகரன்… வட்டார எழுத்துக்களில் நடுநாட்டு மக்களின் வாழ்வைப் பேசும் படைப்பாளி. அந்த மக்களின் வாழ்க்கையை, அந்த மண்ணுக்கேயுரித்தான முந்திரிக்காட்டின் மொழியை தொடர்ச்சியாக தன் படைப்புகளில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்.  கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என்று பல தளத்திலும் இயங்கிவரும் சீரிய படைப்பாளி. கி.ரா, பெருமாள் முருகன் போல் வட்டாரச் சொல்லகராதி கொணர்ந்தவர். ஆறு ஆண்டு கால தீவிர உழைப்பில் கண்மணி கொண்டுவந்த நடுநாட்டுச் சொல்லகராதி நூல் அவரது மிக முக்கியமான ஆக்கம். சம கால தமிழ்ப் படைப்பாளிகளில் மிக மிக முக்கியமானவர் கண்மணி குணசேகரன்.

கண்மணியின் முதல் நாவல் ’அஞ்சலை’ ஒரு மகத்தான நாவல். தமிழ்ப்புனைவுலகில் அஞ்சலை மிக முக்கியமான பெண் பாத்திரம். அஞ்சலையைத் தொடர்ந்து வெளிவந்த கண்மணியின் இரண்டாவது நாவல் ’கோரை’. ஒரு எளிய விவசாயியின் கதை. இவ்விரண்டு நாவல்களிலிருந்தும், தன் வழக்கமான, கதைப்போக்கிலிருந்தும் சற்று விலகி வேறு ஒரு தளத்தில், அதாவது தான் பணியாற்றும் போக்குவரத்துத் தொழில்துறை சார்ந்து புனையப்பட்ட படைப்பே கண்மணியின் மூன்றாவது நாவலான நெடுஞ்சாலை.

கண்மணி குணசேகரன் ஐ.டி.ஐ படித்தவர். மெக்கானிக்காக விருத்தாலசம் அரசு போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் தன் வேலை சார்ந்த வாழ்க்கையை புனைவாக்கிய முயற்சியே நெடுஞ்சாலை.

பேருந்தில் பயணம் செய்யாத மனிதர்களே இருக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவதொரு பேருந்தோடு ஒரு நெருக்கமான பந்தம் இருக்கத்தான் செய்கிறது. பேருந்தை தொட்டுக்கூடப் பார்த்திராத பெருந்தனக்காரர்களைப் பற்றி சொல்லவில்லை. அன்றாட வாழ்வில் ஒரு பேருந்தின் சினேகம் அவசியம் தேவைப்படும் எளிய நடுத்தர மக்களையே குறிப்பிடுகிறேன். என் பால்ய நினைவுகளில் முதல் முதலாக எங்களூருக்கு வந்த மினி பஸ்ஸின் தடம் இன்னும் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு பயணத்தையும் எதிர்வரும் ஏதாவதொரு பேருந்து தீர்மானித்த என் இளவயது நினைவுகளும்.

பயணங்களைப்போல உற்சாகமான வேறொன்று நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. நெடுந்தூரமானால் என்ன இதோ இந்த முக்கில் ஏறி அடுத்த முக்கில் இறங்கிக்கொண்டு ’வர்றேண்ணே’ என்று ட்ரைவரைப் பார்த்துக் கையசத்தபடியே பெருமிதமாக நடந்து வரும் குறும் பயணமாக இருந்தாலென்ன உற்சாகம் ஒன்றுதான். அப்படியான பயணங்கள் எனக்கு நிறைய வாய்த்திருக்கின்றன. உங்களில் பெரும்பாலானோருக்கும் வாய்த்திருக்கலாம்.

இப்படி நம் வாழ்வில் தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் ஓட்டுனர் நடத்துனர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களை, நாம் கடந்துசெல்லும் பணிமனைகளில் நாமறியாத ஒரு உலகம் இருக்கிறது என்பதை நம்மில் எவரேனும் அறிந்திருப்போமா? இதோ நெடுஞ்சாலையில் அந்த வாழ்க்கையை அப்பிடியே அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.

விருத்தாச்சலம் அரசுப் போக்குவரத்துப் பணிமனை தான் கதைக்களம். சி.எல்லாகப் பணிபுரியும் மூன்று இளைஞர்கள். அவர்களின் வாழ்வு. நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள், காதல், காமம், நட்பு. பிள்ளையில்லாத் துயர், தொழில் நெருக்கடிகள், மேலதிகாரிகளின் துரத்தல்கள், துறை சார்ந்த விசாரணைகள், தெரிந்தும் தெரியாமலும் நிகழும் தவறுகள், தண்டனைகள், காத்திருப்பு, சின்ன சின்ன சந்தோஷங்கள் என்று வலி மிகுந்த அவர்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவு செய்கிறது நாவல். துறை சார்ந்த பேச்சுக்கள், சங்கேத வார்த்தைகளால் முதலில் ஒரு பிடி கிடைக்காமல் போய் போகப்போக அந்த சூழல் பழகிவிட நாவலில் ஆழ்ந்துபோக முடிகிறது.  

வெவ்வேறு பின்புலங்களிலிருந்து வரும் தமிழரசன், அய்யனார், ஏழைமுத்து என்று மூன்று இளைஞர்கள். தற்காலிகப் பணியாளர்களாக (Casual Labours) விருத்தாச்சலம் அரசுப்போக்குவரத்துக் கழத்தில் வேலைக்குச் சேர்கின்றனர். டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் என்று மூன்று வேறுவேறு பணிச்சூழல்கள். இவர்களில் மெக்கானிக் அய்யனார் மட்டுமே எம்ப்ளாய்மெண்ட் சி.எல். அதுவும் முறையான ஆர்டர் வந்து பணியில் சேர்ந்தவனில்லை. (’ஏதோ மளிகைக்கடையில் கைச்சாத்து கொடுக்குறமாதிரி டெலிகிராம் சீட்டை கையில் கொடுத்து சி.எல்லாகப் போட்டுவிட்டார்கள்’) எனவே அடையாள அட்டைகூட கிடையாது. முறையான பணி உத்தரவு வரும் என்று மாதக்கணக்கில் காத்திருப்பவன். அய்யனாரின் அம்மாவோ பையனுக்கு பெரியாரில் வேலை என்பதால் பெரிய வரதட்சனை கிடைக்கும் இடமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கிறார். அய்யனாருக்கு அதில் துளியும் விருப்பமில்லை. ஐ.டி.ஐ முடித்தும் மெக்கானிக் தொழில் கற்றுக்கொள்ளாமல் கொத்தனார் வேலை பழகி அதில் தீவிரமாக இருந்தவன். டிப்போ வேலை கிடைத்ததும் அதைவிட்டுவிட்டு இதில் ஒட்டிக்கொண்டான். கொத்தனார் வேலையை விட நல்ல சம்பளமில்லை என்றாலும் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலை என்பதாலும், நிரந்தரமாகிவிட்டால் அரசு வேலைக்காரனாக எதிர்காலத்தை அச்சமின்றி கடக்கும் சாமன்யனின் நம்பிக்கையும் கொண்டு கட்டு மாத்திக்கொண்டு டயர் கழட்டிக்கொண்டு ஏச்சுப்பேச்சுக்கள் தாங்கி காலம் கடத்திக்கொண்டிருக்கிறான்.

தமிழரசன் செட்டியார் வீட்டுப்பையன். வீட்டுக்கு ஒரே வாரிசு. மளிகைக்கடை யாவாரியான அப்பன்செட்டியிடமே ஒட்டிக்கொண்டு எத்தனை காலம்தான் காலம் கடத்துவது என்று திடீரென்று ஞானோதயம் தோன்றி கண்டக்டர் லைசன்ஸ் எடுத்து வைக்கிறான். தனியாரில் வேறொரு முதலாளிச் செட்டியின் ட்ரான்ஸ்போர்ட்டில் கொஞ்ச காலம் ஓடி அந்த முதலாளியின் நடவடிக்கைகளால் வாழ்க்கையே வெறுத்துப்போய் வேலையை விட்டு ஓடி வந்து சிபாரிசு பிடித்து பெரியாரில் சி.எல்லாக சேர்கிறான். தமிழ், சரியான சாமர்த்தியசாலி. யாரை எங்கே அடித்தால் விழுவார்கள் எனும் சூட்சுமம் அறிந்தவன். சி.எல்களிலேயே இவன் ஒரு ஸ்பெஷல் சி.எல். கும்பிடு போட்டே எதையும் சாதிக்கும் டைப். கண்ட்ரோலரை காக்கா பிடித்து அவருக்கு வேண்டியதை செய்துகொடுத்து டெய்லி டூட்டி வாங்கிவிடுகிறான்.

டிரைவர் ஏழைமுத்து அப்பாவி. பெயருக்கேற்ற வாழ்க்கைச்சூழல். டிரைவராக அரசுப்பேருந்தை எடுக்கும் முன் இவனுக்கிருக்கும் ஒரே முன் அனுபவம் உழவுக்காட்டில் டிராக்டர் ஓட்டியதுதான். அவ்வளவு பெரிய பஸ்ஸை நகர்த்தித் திருப்ப பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கிறது. எவ்வளவு முயற்சித்தும் ஸ்டியரிங் பிடிபடவே மாட்டேனெங்கிறது. திக்கித் திணறியபடியே ஓட்டுகிறான் வண்டியையும் வாழ்க்கையையும். வீட்டில் வேறொரு அக்கப்போர், பிள்ளையில்லாத் துயர், அம்மாவின் அராஜகப் பேச்சுக்கள். நிம்மதியற்ற வாழ்வு.


இப்படி இம்மூவரினூடாகத்தான் பயணிக்கிறது நெடுஞ்சாலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வலிகள், காயங்கள். நெடுஞ்சாலைப் பயணத்தில் பல்வேறு கிளைச்சாலைகளும். முக்கியமாக பணிமனை சார்ந்த வாழ்வை அசலாக படம்பிடித்துக் காட்டுகிறார் கண்மணி. கிளை மேலாளர் (Branch Manager), உதவிப் பொறியாளர் (Assistant Engineer) என்று சதா நேரமும் துரத்திக்கொண்டேயிருக்கும் மேலதிகாரிகள். மெக்கானிக்குகள், க்ளீனர்கள், அப்ரண்டிஸ்கள், கேட் வாட்ச்மேன், டீசல் பிடிப்பவர், வந்துசெல்லும் வாகன ஓட்டிகள், கண்டக்டர்கள், கணக்குப் பிள்ளைகள் என்று பல்வேறு பாத்திரங்கள். இரவுப் பணியின் தொந்தரவுகள், தூக்கக் கலக்கம், இடைவிடாது வந்து விழுந்துகொண்டேயிருக்கும் ஏ.யி யின் உத்தரவுகள் என்று இருபத்தி நான்கு மணிநேரமும் ஓரு பரபரப்பான சந்தையைப் போன்றிருக்கும் பணிமனையின் காட்சிகள். ஒரு பார்வையாளனாக எல்லாவற்றையும் துல்லியமாக வாசகனால் பார்க்கமுடிகிறது. குழந்தையை பொருட்காட்சிக்கு அழைத்துச் செல்லும் தந்தையைப் போல கைபிடித்துக் கூட்டிச்செல்லும் கண்மணியின் அபாரமான எழுத்து நடை ஏதொன்றையும் விட்டுவிடாமல் பணிமனையின் இண்டு இடுக்கிற்கெல்லாம் கூட்டிச்சென்று காட்டுகிறது.

கண்மணி குணசேகரனின் எழுத்துக்களின் சிறப்பான எள்ளல் கலந்த ஒருவித அங்கத நடை வாசிப்பை சுவாரஸ்யமாக்குகிறது. நாவலெங்கும் இறைந்து கிடக்கிற நகைச்சுவைகளை வெறுமனே சிரித்து கடந்துவிட முடியவில்லை. அதனுள்ளாகப் பொதிந்திருக்கும் வலியையும் உணரமுடிகிறது. எனினும் சில இடங்களில் வெடித்துச் சிரித்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். மாலை நேர ஓட்டை ஒடிசல் பேருந்தில் கரண்ட் வயரை கட் பண்ணிவிட்டு கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இருட்டில் சில்மிஷம் செய்யும் இளவட்டங்களிடம் பாவப்பட்ட பஸ் டிரைவர் பேசும் பேச்சு ஒரு உதாரணம். இன்னும் நிறைய நிறைய சிரிக்கச் சிரிக்க வலியைப் பேசுகிறார் கண்மணி.

தமிழரசன் – கலைச்செல்வி காதல் அத்தியாயங்கள், ஏழைமுத்து – கனகா இடையிலான சொல்லிக்கொள்ளா பழைய நேசம். அய்யனார் – சந்திரா விற்கு இடையிலான அன்பு. என்று நெகிழ்ச்சியான பக்கங்களும் கலங்கடிக்கின்றன. கணவன் வண்டியோட்டும் பேருந்தில் ஒருமுறையாவது பயணிக்க விரும்பும் பார்வதி. டிக்கட் கேட்கும் கண்டக்டரிம் ’எங்க வீட்ல அண்ண’ என்று கணவன் சொன்னதும் பார்வதிக்கு ஏற்படும் பெருமிதம். இப்பிடி சின்ன சின்ன சந்தோஷமான அபூர்வமான தருணங்களை அழகாக எழுதிச்செல்கிறார் கண்மணி.

நாவலின் பதினாறாவது அத்தியாயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த ஒரு அத்தியாயம் போதும் கண்மணியின் எழுத்து வன்மைக்கு. அப்படி ஒரு நேர்த்தி.  நாவலில் எத்தனையோ கதாபாத்திரங்கள் வந்துபோனாலும் கெஸ்ட் ரோல் மாதிரி இந்த அத்தியாயத்தில் மட்டும் வந்துபோகும் சந்திரா மனதைவிட்டு அகல மறுக்கிறாள். நாவலின் இந்த ஒரு பகுதி மொத்த நாவலின் தரத்தையும் பல படிகளுக்கு உயர்த்துகிறது. தரமான சிறுகதையைப் போன்றிருக்கும் இந்த அத்தியாயத்தை மட்டும் ஒரு குறும்படமாக எடுக்கலாம்.

நாவல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் பிரதானமான கதைப்போக்கு விவரிக்கப்படுகிறது. இரண்டாவது பகுதியில் எதிர்பாராமல் நேர்ந்துவிடும் ஒரு சங்கடமான சூழல் சொல்லப்பட்டுள்ளது. ஏழைமுத்து, தமிழரசன் இருவரும் ஒரு தர்மசங்கடமான நிலையில் விருத்தாச்சலம் – கோணாங்குப்பம் ஸ்பெஷல் ஓட்டப் பணிக்கப்படுகிறார்கள். அது ஒரு லொட லொட ஓட்டை ஒடிசல் கண்டம் வண்டி. இந்த ட்ரிப்போடு பெரியாருடனான தொடர்பை முடித்துக்கொள்வோம் என்று நினைத்து அந்த சிங்கிள் செல்லும் இருவருக்கும் பேரிடியாக வந்து சேர்கிறது ஒரு செய்தி. கண்டமான இந்த வண்டியை கோணாங்குப்பத்திலிருந்து சென்னை வரை ஓட்டிச்செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அனுபவமில்லாத டிரைவர், கண்டம் வண்டி உயிரைக் கையில் பிடித்தபடி ஒரு பயணம். திக் திக்கென்று கடந்துசெல்லும் பக்கங்கள்.

நாவலின் இறுதியில் தொழில்நுட்பச் சொற்களுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்மணி குணசேகரன் தனது இந்த நாவலை ‘ராப்பகலாய் கண்சோராது தன்னுயிராய் பயணியர் உயிர் பேணும் பேருந்து ஓட்டுநர்களுக்கு’ சமர்பித்துள்ளார்.

நாவலெங்கும் விரவிக்கிடக்கும் வட்டார வழக்கு படைப்பின் மீதான வாசக நெருக்கத்தை அதிகரிக்கிறது. தித்திப்பான நடுநாட்டின் மொழி நாவலை வாசித்து முடிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

நாவலை வாசித்து முடித்ததும் தோன்றியது இதுதான்…

‘எனுமா எழுதியிருக்க கண்மணி அண்ண’




புகைப்படங்கள் - நன்றி http://www.jeyamohan.in/
 


செவ்வாய், ஜனவரி 08, 2013

அஞ்ஞாடி





பூமணியின் அஞ்ஞாடி நாவலை கடந்த 2012 ஜனவரி இறுதியில் விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தபோது வாசித்தேன். முதலில் தோன்றியது பெரும் பிரமிப்பு தான். சிவகாசி என் ஊர். நான் பிறந்து வளர்ந்து திரிந்த தெருக்களின் வரலாற்றை வாசித்தபோது மிகுந்த மன எழுச்சிக்கு உள்ளானேன். நாவலை முடித்துவிட்டு அந்த நினைவுகளோடு ஊரை ஒரு வலம் வந்தபோது, வரலாறும் என் கூடவே வந்துகொண்டிருந்தது. நாவல் பற்றிய ஒரு வாசிப்பனுபவத்தை எழுதவேண்டும் என்று முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அப்போதைய மனநிலையில் அதைத் தொடரமுடியவில்லை. விடுமுறை முடிந்து சவுதி திரும்பிய பின்னரும் நாவலின் நினைவுகள் அலைக்கழித்துக்கொண்டுதான் இருந்தன. எழுத முயற்சிப்பதும் தோற்பதுமாக இருந்தேன்.

பொதுவாக விடுமுறை முடிந்து திரும்பும்போதெல்லாம் ஒரு புத்தக மூட்டையுடன் தான் வருவேன். ஆனால் இம்முறை ஒரு புத்தகத்தைக்கூட எடுத்து வரவில்லை. பயணம் திடீரென்று முடிவானதால் வெறும் கையோடு திரும்பிவரும்படி நேர்ந்துவிட்டது. அப்படிக் கொண்டுவராது போன நூல்களில் அஞ்ஞாடியும் ஒன்று. நாவலை வாசித்தும் நெடுநாட்கள் ஆகிவிட்டன. எனவே எழுதவா வேண்டாமா? ஊருக்குப் போனபின் இன்னொரு முறை வாசித்துவிட்டு எழுதிக்கொள்ளலாமே என்றெல்லாம் நினைத்து காலம் கடத்திக்கொண்டிருந்தேன். ஆனால் இன்னும் சில நாட்களில் சென்னைப் புத்தகக்காட்சி தொடங்குவதால் அஞ்ஞாடி பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஏற்கனவே ஊரில் இருக்கும்போது பாதி முடித்து ட்ராஃப்டில் வைத்திருந்தேன். இப்போது தொடர்ச்சியையும் எழுதியாயிற்று.
**********

பூமணியின் அஞ்ஞாடி நாவலை வாசித்து முடித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனாலும் அந்த அனுபவத்தை எழுத்தில் எப்படிக் கொண்டுவருவது என்று தெரியாமல் முழித்தபடியே காலம் கடத்திக்கொண்டிருந்தேன். இந்த வாசிப்பனுபவத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிலத்தின் மீதுதான் ரத்தமும் சதையுமான இந்த வரலாறு நிகழ்ந்தது என்பதுவும் இந்த நாவல் மீதான நெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். அல்லது அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அஞ்ஞாடியை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில் அதை அசை போட்டபடி கடந்துகொண்டிருந்த நாட்களில் எல்லாம் மிகுந்த மன எழுச்சியோடு நடமாடிக்கொண்டிருந்தேன்.

கரிசல் நிலத்தின் நூற்றாண்டு கால சரித்திரத்தை வரலாற்று ஆதாரங்களோடு அழகிய புனைவாக்கியிருக்கிறார் பூமணி. வரலாற்று நாவல்கள் என்ற பெயரில் இதுவரை வாசித்த எல்லா நாவல்களும் ஒன்றுமேயில்லை எனும்படிக்கு நிஜமான வரலாறை புனைவின் அழகியலோடு சொல்லி வாசக மனதிற்கு மிக நெருக்கமாக வந்து புதிய சாளரங்களை திறந்து வைத்திருக்கிறார் ஆசிரியர். தனது கதைகளில் எந்தவிதமான பாசாங்குத்தனத்திற்கும் இடம் கொடாதவர் பூமணி. எளிய மனிதர்களின் வாழ்க்கையை அங்கு சிதறித்தெறித்துக்கொண்டிருக்கும் மொழியை அப்படியே தன் படைப்புகளில் வெளிக்கொணர்பவர். ஒருவகையில் பூமணி என்ற படைப்பாளியின் ஆகச்சிறந்த பலமே அதுதான் என்று நினைக்கிறேன்.

அஞ்ஞாடிக்காக பூமணி எவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்று அறியும்போது வியப்பும் பிரமிப்பும் ஒருங்கே ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக தேடித் தேடி சேகரித்த வராலாற்று ஆதாரங்களை சுவாரஸ்யமான ஒரு நாவலாக பூமணியால் தர முடிந்திருக்கிறது. தனது இத்தனை ஆண்டுகால இலக்கிய வாழ்வின் மிகப்பெரிய உச்சத்தை அஞ்ஞாடி மூலம் அடைந்திருக்கிறார் பூமணி என்றே சொல்வேன். பக்கத்திற்குப் பக்கம் சளைக்காமல் வந்து விழுந்துகொண்டேயிருக்கின்றன வரலாற்றின் காட்சிகள். மறைக்கப்பட்ட அல்லது பரவலாக அறியப்படாது போன பல தலைமுறை தமிழ் மக்களின் வரலாறுகள். உதிரிப்பூக்களைக் கோர்த்து மாலையாக்குவதைப்போல, அப்படி ஒரு நேர்த்தி. பூமணியின் எழுத்தில். பூமணியை முன்பே வாசித்திருப்பவர்களுக்கு அவரது மொழியழகு புரியும். அஞ்ஞாடியில் இன்னும் ’சொகமான’ ஒரு வாசிப்பனுபவத்தைத் தருகிறார்.

சிறுவயதில் புதைச்சேற்றில் சிக்கிக்கொள்ளும் சிறுவன் ஆண்டியை வண்ணான்குடியைச் சேர்ந்த சிறுவன் மாரி காப்பாற்றுகிறான். அதிலிருந்து அவர்களுக்குள் துளிர்விடும் நட்பு காலம் கடந்து தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்கிறது. இருவரும் பேச்சுப்பழக்கம் போட்டபடி காடு கரைகளெல்லாம் சுற்றித்திரிகிறார்கள். மாரி மீது ஆண்டிக்கு அலாதியான ப்ரியம். மாரி தன் கதைகளில் கற்பனை சிறகு விரித்து எங்கெங்கோ பறக்கிறான். படிக்கப் படிக்க ’சொகமான’ கதைகள்.

கழுதைச் சவாரி செய்யப்போய் மாரிக்கு பல் உடைந்துபோகிறது. ஆண்டி கால் பிசகி வீட்டோடு முடங்கிப்போகிறான். ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளமுடியாமல் தவித்துப் போய்விடுகிறார்கள். உடல்நிலை தேறியபின்னர் வழக்கம்போல் தொடர்கிறது அவர்களது நட்பு. கிளியாந்தட்டு விளையாட்டில் மாரியை எவருமே சுமக்க முன்வராதபோது ஆண்டி அவனை சுமக்கிறான். மாரி தயங்கி தயங்கி அவன் முதுகில் ஏறி சவாரி செய்கிறான். ஒருவருக்கொருவர் அன்பு செய்வதில் சாதியோ, வீட்டாரின் கடுமையான எதிர்ப்போ, சக இளவட்டங்களின் ஏளனமோ எதுவுமே தடையாக இருப்பதில்லை இருவருக்கும்.

ஆண்டி கருப்பியை மணக்கிறான். மாரிக்கு துணையாக வடகாட்டிலிருந்து அனந்தி வருகிறாள். வாழ்க்கை இனிக்க இனிக்க சென்றுகொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக மாரி இறந்துவிட துணையிழந்த பறவையாய் தவித்துப்போய்விடுகிறான் ஆண்டி. என்ன செய்தும் மாரியின் நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை அவனால். மாரியின் மனைவி அனந்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் சனங்களோடு போய் சேர்ந்துகொள்ள நினைக்கிறாள். ஆனால் ஆண்டிக்கு இது ஒப்பவில்லை. தன் மரணத்திற்குப் பின் தனது குடும்பத்தை ஆதரிக்கவேண்டும் என்று நண்பன் மாரி கேட்டுக்கொண்டானே அந்த வார்த்தையைக் காப்பாற்றவேண்டுமே என்பதற்காக அவளை அங்கேயே இருந்து வெளுப்புத் தொழிலைப் பார்க்குமாறு சொல்கிறான். அனந்தி தன் மகன் மருதனை வைத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி பிழைப்பு நடத்துகிறாள். மருதன் அப்பனைப்போலவே பாட்டுக்கட்டுகிறான். அவன் பாடலில் மாரியையே பார்ப்பதுபோல் ஒரு உணர்வு ஆண்டிக்கு.

கலிங்கலூரணி கதை இப்படியிருக்க நடுக்காட்டில் அண்ணன்களைத் தொலைத்துவிட்டு நிறைமாத கர்ப்பினியான மனைவியை அழைத்துக்கொண்டு நெஞ்செல்லாம் வேதனையோடு நடந்துவரும் சண்முகத்தின் கதையோ பரிதாபத்திலும் பரிதாபம். மனைவிகள் பேச்சைக்கேட்டு உடன்பிறப்புகளுக்குள் கோபதாபங்கள் முளைத்து சண்டை சச்சரவுகளாகி கடைசியில் ஒருவரையொருவர் வெட்டியும் குத்தியும் அநியாயமாக இறந்துபோகின்றனர். கடைக்குட்டி சண்முகம் அண்ணன்களை பனையோலையில் வைத்து எரித்துவிட்டு அண்ணிகளை அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவிட்டு மனைவி மாலையம்மாளோடு அத்துவானக்காட்டில் தனித்து நடையைக்கட்டுகிறான். வழியில் மாலையம்மாளின் சின்னாத்தா வீட்டில் தங்குகின்றனர். தங்கையா பிறக்கிறான்.

மறுநாள் கழுகுமலைக்குச் சென்று மாலையம்மாளின் அண்ணன் அம்மமுத்துவை தகவல் சொல்லி அழைத்துவருகிறான். மாலையம்மாளின் அப்பா பெரியநாடாரும் ஆண்டியும் சினேகிதர்கள். இந்த நட்பின் காரணமாக சண்முகம் மாலையம்மாளோடு கலிங்கலில் போய்த் தங்கி தனியாகத் தொழில் செய்ய ஆரம்பிக்கிறான். வந்தவர்களை தங்கள் குடும்பத்தினராகவே பாவித்து அன்பு செய்கிறார்கள் ஆண்டியின் குடும்பத்தினர். இப்பிடியாக ஒரு பனையேறி நாடார் குடும்பம் கலிங்கலுக்குள் வருகிறது.

தாது வருடப் பஞ்சம் தொடங்குகிறது. கலிங்கல் மக்கள் திண்டாடித் திணறிப் போகின்றனர். மாரியின் குடும்பம் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டுச் செல்கிறது. ஊரெங்கும் மரணங்கள். பாடை கட்டி முடியவில்லை. ஒரு பிணத்தைப் புதைத்துவிட்டு வருவதற்குள் அடுத்தடுத்து பிணங்கள் விழுகின்றன. சுடுகாட்டுக்குச் செல்லும் வழியிலேயே சுருண்டு விழுந்து மரிக்கும் கொடுமையும் நடந்தேறுகிறது. வேறு வழியின்றி மொத்தமாக பெரிய குழியாகத் தோண்டி பிணங்களைப் புதைக்கின்றனர். ஆண்டி குடும்பத்திலும் சில மரணங்கள். ஆகத் தளர்ந்துபோகிறான் ஆண்டி. ஒரு வழியாகப் பஞ்சத்திலிருந்து மீண்டு வருகின்றனர் மக்கள்.

மதுரையை ஆண்ட நாயக்கர்களின் கதை, எட்டையபுர ஜமீன்களின் கதை. எட்டையபுர மன்னர்களின் பூர்வீகம், அவர்கள் இந்த மண்ணிற்கு வந்து சேர்ந்த கதை. வழி வழியாக வரும் வாரிசுகள், அவர்களுக்குள்ளான சண்டை சச்சரவுகள், என்று தொடர்கிறது. வழக்குகள், விசாரணைகள், ஆவணங்கள் என்று விரிவான தரவுகளோடு இச்சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாடார்களின் பூர்வீக வரலாறு, மேல் சாதியினரின் கடுமையான வரிவிதிப்புக்கு உட்பட்டு கழுத்து நெறிபடும் அவர்களின் வாழ்க்கை. (பெண்களின் மார்புக்கும் வரி விதிக்கப்படுகிறது. வரி செலுத்த முடியாத ஒரு ஏழைப்பெண் கோபத்தில் தன் மார்பை அறுத்து எரிகிறாள்) தோள்சீலைக் கலகம். நாடார்கள் வணிகத்தின் மூலம் எழுச்சி பெற்று முன்னேறுவது, சொந்த மதத்தில் நாயினும் கீழாக மதிக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்து வேதத்தில் சென்று சேர்கிறார்கள். அப்போதும் ரத வீதியில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ரதவீதியில் பல்லக்கில் செல்ல வேண்டும் என்பது நாடார்களின் பெருங்கனவு. அதைத் தகர்க்கும் முயற்சியில் முனைப்போடு செயல்படுகின்றனர் மேல்சாதியினர். கழுகுமலையில் ஒரு தேரட்டத்தின்போது பற்றி எரிகிறது கலவரம். எட்டையபுர ஜமீன் மேனேஜர் கொல்லப்படுகிறார். மேலும் எண்ணற்ற உயிர் பலிகள். பழிக்குப் பழியாக கொலைவெறியோடு களத்திலிறங்கி, தீ வைப்பு, கொலை, கற்பழிப்பு என்று மூர்க்கம் காட்டி கொக்கரிக்கிறது மேல்சாதி. இருபுறமும் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

கழுகுமலையைத் தொடர்ந்து சிவகாசியிலும் தொடர்கிறது போராட்டம். பொருளாதார ரீதியில் மிகப்பெரும் சக்தியாக உயர்ந்துவிட்ட நிலையிலும் நாடர்களுக்கு ஆலய நுழைவு மறுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக போரட்டத்தின் பெரும்தீ பற்றி எரிய ஆரம்பிக்கிறது. மறவர்களும் இன்ன பிற சாதியினரும் இணைந்து ஒரு பெரும்கொள்ளைக்குத் தயாராகின்றனர். இதை முன்பே அறிந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், பதிலடி கொடுக்கவும் நாடார்களும் தயாராகின்றனர். இருந்தபோதிலும் சேதம் மிக மிகக் கடுமையாக இருக்கிறது. சிவகாசி மொத்தமும் ரத்த ஆறு ஓடுகிறது. கூட்டம் கூட்டமாக வெட்டி சாய்க்கப்படுகின்றனர் மக்கள்.

சிவகாசிக் கலவரத்தில் தன் கணவன் தங்கையாவைப் பறிகொடுத்துவிட்டு மகனுடன் கலிங்கலுக்கு வருகிறாள் தெய்வானை. ஆண்டி கொடுக்கும் நிலத்தில் பயிர் செய்து மெல்ல மெல்ல வளர்கிறாள். தெய்வானையின் குடும்பம் பொருளாதார ரீதியில் உயர்கிறது. வாரிசுகள் தலையெடுத்து வளர்கிறார்கள்.

அல்லுண்டு, ஆண்டாள், சுந்தர நாயக்கர், மாடப்பன், கோயிந்தன் என்று கதை விரிவைடைந்துகொண்டே செல்கிறது. மோட்டார் வாகனங்கள் அறிமுகமாகின்றன. தீப்பெட்டி ஆபீஸ் வருகிறது. களையெடுக்கப் போகும் பெண்கள் தீப்பெட்டித் தொழில் பழகுகின்றனர். மின்சாரம் வருகிறது. சினிமா தியேட்டர் வருகிறது. குடுமி தொலைத்து கிராப்புக்கு மாறுகின்றனர். காட்டித் திரிந்த ’அடுப்பி’லிருந்து அண்ட்ராயருக்கு மாறுகின்றனர்.

பல காலங்களுக்குப் பின் சுந்தர நாயக்கர் சாமியாராக கலிங்கலுக்குள் வந்து மரித்துப் போகிறார். அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு மாடப்பன் மலை நோக்கி நடப்பதோடு நிறைவு பெறுகிறது அஞ்ஞாடி. கருப்பியின் மொழியில் சொல்லவேண்டுமானால் ’ஸ்ஸ் அஞ்ஞாடி’

எவ்வளவு தகவல்கள், எத்தனை எத்தனை வரலாற்று ஆதாரங்கள், ஆண்டியிலிருந்து மாடப்பன் வரை எத்தனை கதை மாந்தர்கள். இத்தாம் பெரிய வரலாற்றை ஒரு நாவலுக்குள் எப்படி அடுக்க முடிந்தது என்று அஞ்ஞாடியை வாசித்தபின் பெரும் பிரமிப்பு தோன்றுவது நிச்சயம்.

பூமணியின் சொக்க வைக்கும் மொழியும் அபாரமான கற்பனைகளும் அற்புதமான வாசிப்பனுபவத்தை நல்குகிறது. கழுகுமலைக் கலவரத்தின் போது வேதக்கோயிலிலிருந்து வெளியேறி வரும் மேரி மாதாவிற்கு முருகப்பெருமான் தன் வாகனமான மயிலைக் கொடுத்து அனுப்பி வைப்பது, சிவகாசிக் கலவரத்தின் பின்பு சிவனின் பாம்பும், திருமாலின் கருடனும் ஊரைப் பார்வையிட்டு பேசிக்கொள்ளும் காட்சி, ஆண்டியும் கருப்பியும் அவர்களது மகளும் சவக்குழியிலிருந்து எழுந்து வந்து பேச்சுப்பழக்கம் போடுவது. ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்ததின் வழியாக விவரிக்கப்படும் கருத்தையனின் மரணம், கருத்தையனின் சித்தப்பாவும் சேக்காளியுமான நொண்டியன் பிசாசு உருவில் வந்து ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் தன் கதையைச் சொல்வது, சமணர்கள் கழுவேற்றப்பட்ட பின் நடக்கும் பேய்களின் ஆட்டம் (கண் வெங்காயத்தைக் கடித்துக்கொண்டு மனிதக்கூழைக் குடிக்கும் பேய்கள்) குப்பைமேட்டில் வீசப்பட்ட கருக்கலைப்புக் கழிவுகளிலிருந்து குழந்தைகள் கூவி அழைப்பதான கற்பனை, நாடு விடுதலை பெற்றதைப் பற்றி விலங்குகள் பேசிக்கொள்வது, என்று என்ன அழகான, அற்புதமான கற்பனைகள், கதை உத்தி.



ஆண்டிக்கும் கருப்பிக்கும் இடையிலான அன்பு அலாதியானது. கருப்பி ஆண்டியை ’ஏ இவனே’ என்று பொழுதுக்கும் அழைக்கும் அந்த விளியில் தான் எத்தனை அன்பு. இவர்களிருவருக்குமிடையிலான உரையாடல்கள் வாசிக்க ‘சொகமாக’ இருக்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலிருக்கும் திருவண்ணாமலை கோவிலுக்கு இருவரும் செல்லும் காட்சியும் கூட்ட நெரிசலில் நொடிக்கொருதரம் ‘ஏ இவனே’ என்று ஆண்டியை கருப்பி விளித்துக்கொண்டே வருவதும் அருமையான இடங்கள். தேரோட்டம் பார்ப்பதற்காக ஆண்டியும் கருப்பியும் ஊர்க்காரர்களுடன் செல்கின்றனர். மூலவரை தரிசிக்க அனுமதி இல்லாததால் உற்சவரை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பும்படி நேர்கிறது. கலிங்கலின் இளவட்டங்கள் இதனால் கொதித்துப்போக ஆண்டி அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்த இரண்டு குடும்பர்கள் கதையை சொல்கிறான். பிடிபட்டு அடிவாங்கி ஓடும் அந்த இருவரும் மேல்சாதிக்காரர்களை பழிக்குப் பழி வாங்கும் விதத்தை கேட்டு நல்ல பதிலடி என்று திருப்தியுறுகின்றனர் இளவட்டங்கள்.  

எனக்கு நாவலில் மிகப்பிடித்த மற்றொரு நபர் கோயிந்தன். பொறுப்பற்றவன், எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவன் என்று எல்லோராலும் கிண்டலாகப் பார்க்கப்படும் கோயிந்தன் தான் கலிங்கலூரணியின் புரட்சிக்காரனாகவும் இருக்கிறான். கலிங்கல் ஆண்கள் காட்டித் திரிந்த ’அடுப்பிலிருந்து’ அண்ட்ராயருக்கு மாறுவதற்கு கோயிந்தனின் அதிரடி நடவடிக்கைகளே காரணமாக இருக்கிறது. சவுரி முடி ரகசியத்தை கோயிந்தன் அறிந்துகொள்ளுமிடம் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறது. எதையும் மாற்றுக்கோணத்தில் யோசித்தபடியே இருக்கிறான் கோயிந்தன். ஓரிடத்தில் அவனால் எப்போதும் நிலையாய் இருக்கமுடிவதில்லை. எதையாவது தேடிக்கொண்டும் ஏதாவது செய்துகொண்டுமே இருக்கிறான். சாமியார் சுந்தர நாயக்கர் கோயிந்தனுக்கு நல்ல கூட்டாளியாக வந்து வாய்க்கிறார். அவருடனான கோயிந்தனின் நட்பும் அவரிடமான இவனின் உரையாடலும் கூட முக்கியமானவையே. சாமியார் சுந்தர நாயக்கரின் கதை மற்ற கிளைக்கதைகளைப் போலவே நெகிழ்வான ஒன்று. இந்தப் பகுதியில் எவ்வளவு அழகாக உறவுச் சிக்கல்களைப் பேசியிருக்கிறார் பூமணி.

நாவலின் இறுதியில் ஒரு பெரிய நன்றிப் பட்டியலை இணைத்திருக்கிறார் பூமணி. நாவலில் இடம்பெறும் வரலாற்றுச் சம்பவங்களுக்கான தரவுகள், உதவிய மனிதர்கள், விவாதித்தவர்கள் என்று இரண்டு பக்கத்திற்கு ஒரு நன்றிப் பட்டியல். இப்படி ஒரு விரிவான,, இதுவரை பரவலாக அறியப்படாத வரலாற்றை முன்வைக்கும் நாவலுக்கு இந்தப் பட்டியல் மிக அவசியம் என்றே நான் நினைக்கிறேன்.


ஆண்டிக்கும் மாரிக்கும் இடையிலான நட்பு, பொய்யாளி-வேலாயி, கருத்தையன்-வீரம்மா காதல், கணவனை விட்டு வேறொருவருடன் சென்றுவிடும் எஸ்தரின் துரோகம், முறையே மகன், மருமகளால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் பொம்மக்கா, கோயிந்தனின் வலிகள், என்று நாவல் பல தளங்களில் பல பரிமாணங்களில் விரிந்து சென்றுகொண்டேயிருக்கிறது. ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பும் சம்பவம், கழுமலை, சிவகாசிக் கலவரங்கள் சொல்லப்பட்ட விதங்கள், காட்சியமைப்புகள் அடுக்கப்பட்ட விதங்கள் எல்லாம் சேர்ந்து பூமணிக்குள் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் இருக்கிறார்கள் என்று நினைக்க வைக்கிறது. நாவலின் முன்னுரையில் திரு.என்.சிவராமனும் இதைக் குறிப்பிடுகிறார்.

நாவல் தொட்டுச்செல்லும் தளங்களை மிக அழகாக தன் முன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கும் திரு.என்.சிவராமன் அவர்களையும் மறக்காமல் குறிப்பிடவேண்டும். இப்படி ஒரு அற்புதமான படைப்பிற்கு நியாயம் செய்யும் மிக முக்கியமானதொரு முன்னுரை அது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அள்ள அள்ளக் குறையாமல் வந்துகொண்டேயிருக்கிறது பூமணியின் கதையமுதம். சொலவடைகள், பழந்தமிழ் மரபு, கந்தக மண்ணின் வெக்கை.. என்று விரியும் இந்நாவல் தமிழுக்கு ஒரு கொடை. அஞ்ஞாடி மூலம் தமிழ் வாசகப் பரப்பில் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறார் பூமணி.

என்.சிவராமன் தன் முன்னுரையின் இறுதியில் நாவல் பற்றிக் குறிப்பிடுவதையே நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாவலில் பனை பற்றி ஒரு உரையாடல் வரும், ‘பனமரம்ங்குறது இன்னிக்கு வச்சி நாளைக்கு மொளைக்குற பயிருன்னா நினைச்ச, அது ஒரு தலமொற வளத்து இன்னொரு தலமொறைக்குக் கொடுத்துட்டுப் போற சீதனம்’ என்று

இந்த நாவலும் அப்படித்தான்.

அஞ்ஞாடி – பூமணி
க்ரியா பதிப்பகம்
விலை ரூ. 925